20130512

உலக இசைப் பாடல் - 1

இசைக்கு மொழியோ மொழிக்கு இசையோ தேவையில்லை என்பது தான் எப்போதுமே எனது கருத்து. சிறந்த இசை தன்னளவிலேயே உலகளாவிய மானுட மொழி. ஆனால் இசையின் பல வெளிப்பாட்டுக்களில் ஒன்றான பாடலுக்கு மொழி இன்றியமையாதது. சிறந்த இசையின் ஊடாக கவித்துவமான மொழி வெளிப்படும்போது தான் அரிதான பாடல்கள் பிறக்கின்றன. உலகம் முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான மொழிகளில் இத்தைகைய பல்லாயிரம் அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. இன்றும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. காலத்தால் ஒளிமங்காத அத்தகைய பாடல்களில் எனது மிகுந்த விருப்பத்திற்குரிய சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்து தருவதற்கான எளிய முயற்சிதான் இது.

சுதந்திரமாகப் பிறந்தவன் (Born Free)
எழுதி இசையமைத்து பாடியவர் – கிட் ராக் (Kid Rock)
பாடல் – சுதந்திரமாகப் பிறந்தவன் (Born Free)
பாடல் வகைமை - ராக்
மொழி – ஆங்கிலம்
நாடு – அமேரிக்கா
ஆண்டு – 2010
தமிழாக்கம் : ஷாஜி

அமேரிக்க சமகால வெகுஜென இசைப் பாடகர்களில் முக்கிய்மானவரான கிட் ராக் இன் நிஜப்பெயர் ராபர்ட் ஜேம்ஸ் ரிச்சி. 25 ஆண்டுகாலமாக இசைத்துறையில் பிரபலமாக இருக்கிறார். ராக், ராப், கண்ட்ரி இசை வகைமைகளில் பல புகழ்பெற்ற பாடல்களை உருவாக்கியவர். தனது பாடல்களின் வரிகளிலும் ஒலியமைப்பிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார். 

சுதந்திரமாகப் பிறந்தவன்

கரடுமுரடான பாதைகளில் வேகமாக பயணிக்க முயன்றவன்
வானுயர்ந்த மலைகளில் வலிந்து ஏறப் பார்த்தவன்
வீட்டிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டவன்
மழையில், மின்னலில் முரட்டுத்தனமாகப் பாய்ந்தவன்
அறிவுக்கு எட்டாத காட்டில் அலைந்து திரிந்தவன்

நான் திரும்பி வரவில்லையென்றால்
யாருமே எனக்காக அழக்கூடாது
ஒன்று மட்டுமே உலகிற்கு சொல்லுங்கள்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்

கொந்தளிக்கும் ஆற்றைப்போல் பாய்ந்தோடினேன்
கொடுங்காற்றிற்கு எதிராய் நடந்து சென்றேன்
கனவுகளை பின்தொடர்ந்து வேட்டையாடினேன்
காலத்துடன் பந்தயத்தில் ஓடி மோதினேன்
என் இதயம் காணாதவர்கள் குருடர்கள்
என் இதயம் காணாதவர்கள் குருடர்கள்

என்னை இடித்து விழவைத்தனர்
ஒழுகும் என் குருதி பார்த்து கொண்டாடினர்
இருந்தும் என்மேல் விலங்கு விழும் முன்
பறந்தோடினேன் நான் பறந்தோடினேன் 
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்

சாந்தமானவன் நான்
ஆபத்தின் கண்களில் ஆழ்ந்து பார்த்தவன்
அந்நியனைப்போல் எங்கோ தொலைந்துபோனவன்
வருத்தங்கள் ஏதுமே இல்லாதவன்

இலக்கை நெருங்கிவிட்டேன், அடையவில்லை
இன்று நான் சோர்வில் வலிகளில் வாடியவன்
அஸ்தமனத்திற்காக காத்திருக்கிறேன்
மறையும் முன்னும் மலை முகடில் நின்று உரக்க கத்துவேன்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்
ஒளி இளகும் கடலுக்கு மாத்திரமே தலை வணங்குபவன்