20141214

வண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது


பார்க்காத படத்தின் கதை - 2
அந்திமழை - டிசம்பர் 2014


என்ன சத்தமிது? மீண்டும் ஒரு பாலம் கடந்து போகிறதா? பாலங்களுக்குமேல் நடுங்கும் தண்டவாளங்களில் பாய்ந்தோடும் இரும்புக் கூண்டில் நான். காலங்காலமாக நான் பாலங்களைக் கடந்துகொண்டேயிருக்கிறேன். ஓரிடத்தில் ஏறி இன்னோரிடத்திற்குச் செல்கிறார்கள் பயணிகள். ஒரு பகலோ இரவோ முடியும்போது தங்களது இலக்கைச் சென்றடைகிறார்கள். நான் எங்கிருந்து ஏறினேன்? எங்கேயும் செல்லாமல் எண்ணங்களிலிருந்து எண்ணங்களுக்குப் பயணிக்கிறேன். எதில் சிக்கியிருக்கிறேன்? எங்கே போகிறேன்? எதற்குப் போகிறேன்? யாரிடம் போர் பொருதுகிறேன்?

பின்னிரவில் 27 டௌண் மும்பாய் வாரணாஸி விரைவு ரயிலின் பெட்டிகளொன்றில் பாதி மயக்கத்திலிருந்து விழித்தெழும் சஞ்சய் என்பவர் இப்படி யோசிக்கத் துவங்குகிறார். அவர் ஒரு ரயில் சீட்டுப் பரிசோதனை அதிகாரி. அந்த வேலையை அவர் வெறுக்கிறார். ஆனால் ஓய்வே எடுக்காமல் ஒரு ரயிலிலிருந்து இன்னொரு ரயிலில் ஏறி இலக்கில்லாமல் பயணித்துக் கோண்டேயிருக்கிறார். சாதகமாகவோ பாதகமாகவோ யாரிடமும் பேச முடியாதவரான, எந்தச் சூழ்நிலையிலும் தன்னை வெளிப்படுத்த முடியாதவரான அந்த மனிதனின் மன ஓட்டங்களையும் வாழ்க்கையையும் நுட்பமாகச் சித்தரிக்கும் ஹிந்தித் திரைப்படம் 27 டௌண். நான் பார்த்த அசாத்தியமான இந்தியப் படங்களில் ஒன்று. 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு கருப்பு வெள்ளைத் திரைப்படம் அது.

மனிதனின் மன ஓட்டங்களை திரைப்படக் காட்சிகளாகக் மாற்றுவதென்பது மிகவும் கடினமானது. உலக சினிமாவிலேயே இங்மர் பெர்க்மன் போன்ற ஒரு சில இயக்குநர்களால் மட்டுமே அது சாத்தியமாகியிருக்கிறது. உலகின் நவீன எழுத்தாளர்களில் ஃபிரான்ஸ் காஃப்கா தனது பாத்திரங்களின் வெளிப்படுத்த முடியாத மன ஓட்டங்களை ஆற்றலுடன் எழுதிச் சென்றவர். மையப் பாத்திரங்கள் தங்களது அப்பாக்களின் ஆதிக்கத்தால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவதை சித்தரிக்கும் காஃப்காவின் கதைகளின் இலக்கியத் தரத்தில், காட்டு ஸ்ட்ராபெரிப் பழங்கள் (Wild Strawberries) போன்ற பெர்க்மனின் திரைப் படங்களின் காட்சித் தரத்தில் எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் 27 டௌண்.

தனது அம்மாவை ‘சேச்சி’ (அக்கா) என்று அழைத்து வந்தான் எனது பள்ளித் தோழன் சலிம் குமார்! சிறுவயதில் உறவினர்கள் அழைப்பதைக் கேட்டு அப்படி அழைக்க ஆரம்பித்து பின்னர் அதை மாற்றமுடியாமல் தொடரும் இதுபோன்ற பலரை எனக்குத் தெரியும். நானே எனது அப்பாவை அச்சான்என்று தான் அழைத்து வந்தேன். அந்த வார்த்தையின் பொருளோ, எதனால் அப்படி அழைத்தேன் என்றோ இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது! 27 டௌண் படத்தின் மையப் பாத்திரம் சஞ்சய் தனது அப்பாவை அண்ணா என்றும் அம்மாவை அக்கா என்றும்தான் அழைக்கிறார். தனக்கு உண்மையான அப்பாவாக அவர் இல்லை என்பதன் குறியீடு அது.    

ரயில் ஓட்டுனரான அப்பாவின் கடுமையான கண்டிப்பில் சிறுவயதிலிருந்தே பயந்து பயந்து வளரும் சஞ்சய்யால் அப்பாவின் எந்தச் சொல்லையுமே மறுக்க முடிவதில்லை. அப்பாவுடனான அவரது கருத்து வேறுபாடுகள் அனைத்துமே “னால் அண்ணா...என்ற இரண்டு வார்த்தைகளில் ஒடுங்கிப் போகின்றன. தனது நினைவுகள் தொடங்கும் காலத்திலிருந்தே சஞ்சய்க்குத் தெரிந்தது தண்டவாளங்களும் ரயில்ப் பெட்டிகளும் மட்டும்தான். தண்டவாளங்களின் தனிமையுடன் ஓடி விளையாடுவதுதான் அவரது ஒரே குழந்தைப் பருவ விளையாட்டு. தென்னிந்தியாவில் எங்கோ இருக்கும் தங்களது சொந்தக் கிராமத்துக்கு சென்றுவரும் அரிதான பயணங்களில்கூட அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் மௌனமும்தான் அவரை விடாமல் தொடர்கிறது.

ஓர் ஓவியராக மாற வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். ஆனால் ரயில் ஓட்டுனரான தனது மகன் ஒரு ரயில்வே அதிகாரியாகவே வரவேண்டும் என்பது அப்பாவின் ஆசையல்ல, ஆணை! வேலையில் நடக்கும் ஒரு விபத்தில் அப்பா தனது காலை இழக்கிறார். கருணை அடிப்படையில் கிடைக்கும் ரயில்வே வேலையில் உடனடியாகச் சேரும் கட்டாயத்திற்கு ஆளாகிறார் சஞ்சய்.

மீண்டும் ரயில்ப் பெட்டிகள்! தண்டவாளங்கள்! தனது அறைக்கே செல்லாமல் ரயில்ப் பெட்டிகளிலேயே தூங்கி விழித்து வெறுமையில் வாழத் துவங்குகிறார். இடையே ஒரு காதல் மலர்கிறது. அங்கும் அப்பாவின் சொல்லை மீற முடிவதில்லை. அவர் கைகாட்டும் பெண்ணை மணம் புரிய நேர்கிறது. அப்பெண்ணை ஆத்மார்த்தமாக நேசிக்க முயன்றாலும் தன்னை ஒருவகையிலும் புரிந்துகொள்ள முடியாத அவளிடமிருந்து ஓடி ஒளியும் நிலைமை ஏற்படுகிறது.

பக்தியில் சரணடையலாம் என்று காசிக்குப் புறப்படுகிறார். ஆனால் அங்கு ஒரு விபச்சார விடுதியில் ஒரு விலைமாதிடம்தான் சரணடைகிறார். அப்பெண் அன்பானவள். ஆனால் தான் செய்வது சரியா தவறா என்ற மனப்பிறழ்வு அங்கிருந்தும் அவரைத் துரத்துகிறது. இறுதியில் காதலித்த பெண்ணிடமே திரும்பிச் சென்று நிராதரவாக நிற்கிறார். அவளுக்கோ இப்போது அவர்மேல் எந்த அன்பும் மீதமில்லை. இருந்தும் ஒருநாள் கழித்து, அவர்களது காதல் மலர்ந்த ரயில் நிலையத்தில் மீண்டும் சந்திக்கிறேன் என்கிறாள். சஞ்சய் அவளுக்காக நீண்டநேரம் அங்கு காத்திருக்கிறார். ஆனால் அவள் வரவேயில்லை. சஞ்சய் இறுதியில் இலக்கில்லாத, முடிவற்ற ரயில்ப் பயணங்களில் என்றைக்குமாகத் தொலைந்துபோகிறார்.

அனல் பறக்கும் வசனங்களோ, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் நிகழ்வுகளோ, அடிக்கடி நிகழும் திருப்பங்களோ, சுவாரசியம் ஏற்றுவதற்கென ஜோடிக்கப்பட்ட காட்சிகளோ இல்லாமல் ஓர் ஆவணப்படத்தின் பாணியில் மெதுவாகவும் மௌனமாகவும் 27 டௌணின் காட்சிகள் விரிகின்றன. படத்தின் முக்கியப் பாத்திரம் ரயில்தான் என்று சொல்லலாம். நெடுந்தொலைவு போகும் ரயில்கள், மும்பாய் உள்ளூர் ரயில்கள், மும்பாயின் வி டி மற்றும் பல ரயில் நிலையங்கள், அவற்றின் உணவுக் கடைகள், தண்டவாளங்கள், நடைமேடைகள் என நிஜமான இடங்களில் இயல்பாக இருக்கும் வெளிச்சத்தில் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவின் உச்சபட்ச சாத்தியங்களை வெளிப்படுத்துகிறது 27 டௌண்.

உலகத்தரமான கருப்பு வெள்ளை காட்சிகளை இப்படத்தில் உருவாக்கியதுவழி அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்திய அபூர்வ கிஷோர் பீர் (A K Bir) எனும் ஒளிப்பதிவாளருக்கு அப்போது வயது வெறும் 22! கருப்பு வெள்ளைப் படங்கள் காலாவதியாகி அப்போது பல ஆண்டுகள் தாண்டிவிட்டிருந்தன. ஹிந்தியில் 1964ல் வந்த தோஸ்தி எனும் படத்திற்கு பிறகு ஒரு கருப்பு வெள்ளைப் படம்கூட சரியாக ஓடவில்லை. கருப்பு வெள்ளைப் படங்கள் அங்கு முற்றிலுமாக நின்று விட்டிருந்த. இருந்தும் 27 டௌண் கருப்பு வெள்ளையில் எடுத்ததன் ஒரே காரணம் பணம் பற்றாக்குறை மட்டுமே!. தேசிய திரைப்பட மேம்பாடு அமைப்பிலிருந்து (NFDC) கடன் வாங்கிய 2 லட்சம் ரூபாயை மட்டுமே வைத்துக்கொண்டு 33 வயதிலிருந்த அவதார் கிருஷ்ண கௌள் இயக்கிய படம் 27 டௌண்.

அவதார் கிருஷ்ண கௌள் 1939ல் கஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் ஒரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பதின்பருவத்திலேயே வீட்டையும் ஊரையும் விட்டு திரைப்படிப்பிற்காக அமேரிக்கா சென்று விட்டார். அங்கு சில்லறை வேலைகள் செய்து பணம் சம்பாதித்து திரைப்படக் கலையைப் பயின்றார். உணவகங்களில் துப்புரவாளராகவும் வாடகை வாகன ஓட்டுனராகவும் வேலை செய்திருக்கிறார். 29 ஆவது வயதில் இந்தியா திரும்பிய அவர் ஹிந்தித் திரைப் படத்துறையையே பின்புலமாக வைத்து மர்ச்சன்ட் ஐவரி எடுத்த பாம்பே டாக்கி எனும் ஆங்கிலப் படத்தில் துணை இயக்குநராக பணி புரிந்தார். பின்னர் தனது முதல் படத்தின் கனவுடன் அலையத் துவங்கினார்.

வேலையில்லாக் கலைஞர்களின் சரணாலயமாகயிருந்த தில்லியின் திரிவேணி கலா சங்கமத்திற்கு உள்ளே சிறிய புத்தகக் கடை ஒன்று இருந்தது. ஒருநாள் அங்கு சென்ற அவதார் கௌள், வந்து பலகாலமாகியும் ஒரு பிரதி கூட விற்காத ஹிந்தி புனைகதைப் புத்தகங்களை காட்டச் சொன்னார்! எடுத்துவைக்கப்பட்ட பல புத்தகங்களிலிருந்து ரமேஷ் பக்‌ஷி (Ramesh Bakshi) எழுதிய ’பதினெட்டாவது சூரியனின் இளஞ்செடிகள்’ எனும் சிறுகதையை எடுத்துப் படித்து முடித்தார்.

உலக எழுத்தாளர்களான காஃப்கா, காம்யு போன்றவர்களின் தெறிப்புக்கள் தென்பட்ட அக்கதையின் எழுத்தாளரைத் தேடிக் கண்டுபிடித்தார். அவருடன் இணைந்து 27 டௌணின் திரைக்கதையை உருவாக்கினார். மையப் பாத்திரமாக நாடக நடிகராகயிருந்த மஹராஜ் கிருஷ்ண ரெய்னா (M K Raina) தேர்வு செய்யப்பட்டார். பூனா திரைப்படக் கல்லூரியிலிருந்து ஒளிப்பதிவு படித்து வெளியே வந்த ஏ கெ பீர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார். சம்பளம் 3000 ரூபாய்! கதாநாயகி பிரபல நடிகை ராக்கி (Rakhi). திரைக்கு முன்னும் பின்னுமிருந்த மற்ற அனைவருமே புதுமுகங்கள்.

முழுக்க முழுக்க ரயில் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை நிஜ ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் எடுத்து முடிப்பது இன்றுவரைக்கும் மிகக் கடினமான காரியம். பெரும் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு எண்ணற்ற நடைமுறைச் சிக்கல்களை சந்திக்காமல் அது சாத்தியமே ஆகாது. ஆனால் துணிச்சலான அந்த இளைஞர்கள் யாரிடமுமே அனுமதி கோராமல் கையில் பிடித்த கேமராவை வைத்துக்கொண்டு ரயிலக்ளுக்குள்ளே மும்முரமாகப் படப்பிடிப்பில் ஈடுபட்டனர்.

ரயில் போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டனர். உள்ளூர் ரௌடிகளின் கையில் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். ரயிலில் திருட்டுத்தனமாகக் காட்சிகளைப் பதிவு செய்யும்போது ராணுவத்திடம் சிக்கி வதைக்கப்பட்டனர். ராணுவக்காரர்கள் அவர்களை பாகிஸ்தான் உளவாளிகளெனத் தவறாகப் புரிந்துகொண்டு அடித்துத் துவைத்தனர். அனைவருக்குமே வயது குறைவாக இருந்ததனால் நிஜ சினிமாப் படப்பிடிப்பு அது என்று யாருமே நம்பவில்லை!

விளக்குகள் இல்லவேயில்லை! தனக்கு ஒப்பனையே இல்லை! சின்னப் பையன்கள்  தன்னைவைத்து விளையாடுகிறார்கள் என்று நினைத்த கதாநாயகி ராக்கி பல சிக்கல்களை உண்டுபண்ணினார். எடுத்த காட்சிகளைத் திரையில் போட்டுக் காட்டாமல் மீண்டும் படப்பிடிப்புக்கு வரமுடியாது என்று சண்டையிட்டுக் கிளம்பினார். எடுத்த காட்சிகளைப் போட்டுக் காட்டுவது அப்போது மிகவும் கடினமான ஒன்று. இருந்தும் கஷ்டப்பட்டு அதற்கும் ஏற்பாடு செய்தார் அவதார் கௌள். ”விளக்கில்லாமல் படம் எடுத்தால் திரையில் இருட்டுதான் தெரியும்! வாங்க, கொஞ்சம் இருட்டைப் பார்க்கலாம்” என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு ஒரு கும்பலுடன் படம் பார்க்க வந்த ராக்கி எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்து வியந்துபோனார். அதன்பின் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

ஒரே ஒரு காட்சித் துணுக்குக்காக ஐந்தாறு மைல்களுக்குமேல் கனமான கேமராவைத் தூக்கிக்கொண்டு கால்நடையாகவே சென்றிருக்கிறார்கள்! வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு அதிசய நிகழ்வுதான் 27 டௌணின் படப்பிடிப்பு என்று ஏ கெ பீர் பிற்பாடு சொன்னார். கேமராவைத் தூக்கிவைக்கும் கருவிகள் எதுவுமில்லை. அதைத் தோளில் வைத்துக்கொண்டு நெருக்கியடிக்கும் கூட்டத்திற்கு நடுவே நடந்துசென்று படம் பிடிக்கவேண்டும்.

இப்படத்தில் யாருமற்ற ஒரு ரயில் நடைமேடையின் பறவைக்கோணக் காட்சி ஒன்று இருக்கிறது. ஒரு மாநகர ரயில் அங்கு வந்து நிற்கிறது. ஒரு சின்னப் பெட்டிபோல் காட்சியளிக்கும் அந்த ரயிலிலிருந்து கூட்டமாக வெளியேறும் மக்கள் வெள்ளத்தில், சில நிமிடங்களில் அந்த நடைமேடை ஒரு மனிதக் கடலாக மாறுகிறது! உலக சினிமாவிலேயே நிகரற்ற இந்த ஒரே ஒரு காட்சி மட்டுமே போதும் 27 டௌண் படத்தின் மகத்துவத்திற்குச் சான்றாக.  

புல்லாங்குழல் வித்தகரான ஹரிபிரசாத் சௌரஸியாவும், ஒடிசி நடனத்தில் காலங்காலமாக  கையாண்டுவரும் முக்கியமான பல இசைகளை அமைத்த பண்டிட் புவனேசுவர் மிஷ்ராவும் இணைந்து புவன்-ஹரி என்ற பெயரில் இப்படத்தின் இசையை அமைத்தனர். சிலயிடங்களில் அதீத நாடகத்தனம் கொண்டது என்று அப்போது சிலரால் குறை சொல்லப்பட்ட இசை அது. இப்போது மீண்டும் பார்க்கையில் 27 டௌணின் இசைத்தடம் அசாத்தியமான ஒன்றாகவே எனக்குப் படுகிறது. நாடகத்தனம்கொண்ட அந்த இசை படத்திற்கு மற்றுமொரு பரிமாணத்தைதான் அளிக்கிறது.

கருப்பு வெள்ளைப்படத்தைப் பார்க்க யாருமே விரும்பாத ஒரு காலகட்டத்தில் வெளியாகியும் ஓரிரு திரையரங்குகளில் மூன்று வாரம் வரைக்கும் ஓடியது 27 டௌண். பல வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களுக்கு படம் தேர்வுசெய்யப்பட்டது. இருந்தும் படத்தின் தரத்திற்கோ தகுதிக்கோ ஏற்ற வரவேற்பு எதுவும் அப்போது கிடைக்கவில்லை. பின்னர் 1974ஆம் ஆண்டின் சிறந்த ஹிந்தி திரைப்படம், இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் இரண்டு தேசிய விருதுகள் படத்திற்கு வழங்கப்பட்டன. பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் 27 டௌண் கொண்டாடப்பட்டது.

படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து மழைகொட்டும் ஒரு மாலையில் மும்பாயின் வால்கேசுவர் கடற்கரையில் மனச்சோர்வுடன் நின்றுகொண்டிருந்தார் அவதார் கிருஷ்ண கௌள். அடித்துச் சிதறும் கடல் அலைகளுக்குள்ளே ஒரு பெண் மூழ்கிப் போவதை திடீரென்று அவர் கண்டார். உடன் கடலில் குதித்து அப்பெண்ணை ஒரு வழியாகக் கரை சேர்த்தார். ஆனால் அதற்கிடையே அவர்மேல் பாய்ந்த பேரலைகள் அவதார் கௌளை அடித்துக் கொண்டுபோனது.

சில நாட்கள் கழித்து எம் கே ரைனாவுக்கு அவதார் கௌளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”அன்பு ரைனா.. இங்கே யாருமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் நமது படம் மதிப்புமிக்க லொகார்னோ திரைப்பட விழாவின் முக்கியச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அங்கு சென்றுவரக்கூட என்னிடம் பணமில்லை. நமது படம் அங்கு அநாதையாக நிற்கப்போகிறது”.

சகமனிதர்களையும் திரைப்படக்கலையையும் உயிர்விட்டு நேசித்த அவதார் கௌள், தான் எடுத்த ஒரே ஒரு திரைப்படத்தை அநாதையாக விட்டு விட்டு மறதிக்குள் மறைந்துபோனார். இன்றும் சிதைந்துபோன இரும்புத் தூண்களில் ரயில் பாலங்கள் பயந்து நிற்கின்றன. எதையுமே நினைவில் வைக்காத கொடூரமான காலம் அவற்றின் மேல் இலக்கில்லாமல் பாய்ந்துகொண்டிருக்கிறது.


shaajichennai@gmail.com